குவைத்: போதை மாத்திரைகளுடன் ஈராக்கிற்கு பறந்த புறாவை குவைத் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர். பண்டைய காலத்தில் அரசர்கள் புறாவை தூது அனுப்ப பயன்படுத்தினர். குறிப்பாக இரு அரசுகளுக்கு இடையே செய்திகளை பரிமாறிக்கொள்ளவும், காதலர்கள் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் புறாக்கள் பயன்பட்டுள்ளன. புறாக்களால் பல நூறு மைல் தூரத்தை சுலபமாக பறந்து கடக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தை சரியாக சென்றடைய முடியும். இதனாலேயே புறாக்கள் தூது அனுப்ப சிறந்த பறவையாக உள்ளன.
ஆனால் தற்போது புறாவை போதை மாத்திரை கடத்த பயன்படுத்துகிறார்கள். குவைத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவைத்திலிருந்து ஈராக்கிற்கு போதை மாத்திரைகளுடன் சென்ற புறாவை குவைத் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர். ஒரு சிறிய பையில் 178 போதை மாத்திரைகளுடன் குவைத்திலிருந்து ஈராக்கை நோக்கி பறந்து சென்ற புறா ஒன்று குவைத் - ஈராக் எல்லையில் உள்ள குவைத் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அருகில் கட்டிடத்தின் மீது அமர்ந்திருந்தபோது பிடிபட்டது. பிடிபட்ட அந்த புறாவின் முதுகில் இணைக்கப்பட்டிருந்த அந்த பையை திறந்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட 178 போதை மாத்திரைகள் இருந்தது சுங்கத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதுகுறித்து குவைத் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment