வாஷிங்டன்: பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதியளித்தது போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஒபாமா ஆட்சியின்போது 190 நாடுகள் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலகில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மாசு கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு நாடும் தனது திட்டத்தை தயாரித்து ஒப்படைத்தது. ஆனால் அதிபர் டிரம்ப் நேற்று இரவு வாஷிங்டனில் அதிரடியாக, பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தியாவும், சீனாவும்தான் இந்த ஒப்பந்தத்தால் அதிகமான ஆதாயம் பெறுவதாகவும் டிரம்ப் கூறினார். இந்தியாவுக்கு பசுமையைப் பேண பல மில்லியன் டாலர் நிதியுதவிகள் கிடைக்கிறது என்றும் இந்தியாவும், சீனாவும் தனது நிலக்கரி சுரங்கங்களை 2020-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது என்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் நியாயம் செய்யவில்லை என்றும் அது மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். பசுமைத்திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றும் அமெரிக்கர்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். பாரீஸ் ஒப்பந்தத்தை விட தமக்கு அமெரிக்கா முக்கியம் என்று டிரம்ப் சூளுரைத்தார். அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment